கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்தது. பின் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல்கள் நகர்ந்து சென்றதால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் அளவு வெகுவாக குறைந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது போல தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

நாகை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.