Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தாக்கியதாக வதந்தி..! மன உளைச்சலில் மதுரை வாலிபர் தற்கொலை..!

மருத்துவமனையில் முஸ்தபாவையும் அவரது தாயாரையும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்ததையடுத்து இருவரையும் மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே முஸ்தபா சரக்கு வாகனத்தில் மருத்துவமனை செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

youth attempted suicide in madurai due to fake news spread about him as affected by corona
Author
Tamil Nadu, First Published Apr 2, 2020, 9:20 AM IST

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா(34). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. முஸ்தபா கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பாக முஸ்தபா தமிழகம் வந்து தனது தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் எனக் கருதி அப்பகுதி மக்கள் சுகாதாரத் துறைக்கு தகவல் அளித்தனர்.

image

அதன்பேரில் முஸ்தபாவையும் அவரது தாயாரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சை வரவழைத்து உள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி மக்கள் சரக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாக பதிவு செய்து அப்பகுதி முழுவதும் வாட்ஸ்அப் மூலமாக பரவச் செய்துள்ளனர்.

image

இந்த நிலையில் மருத்துவமனையில் முஸ்தபாவையும் அவரது தாயாரையும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்ததையடுத்து இருவரையும் மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே முஸ்தபா சரக்கு வாகனத்தில் மருத்துவமனை செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த முஸ்தபா மன உளைச்சலில் இருந்தார். இதனால் நேற்று காலையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். 

தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். கொரோனா தாக்கியவர் என்ற வதந்தியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios