மதுரை அருகே வாழைப்பழம் கொடுக்க தாமதமானதால் பெட்டிக்கடை வியாபாரியை இரு வாலிபர்கள் ஓடஓட விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையில் இருக்கும் யாகப்பா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் சொந்தமாக வாழைமண்டியும் அதன் அருகேயே பெட்டிக்கடையும் வைத்து தொழில் பார்த்து வருகிறார். வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதால் தினமும் அதிகாலையிலேயே கடையை திறந்து விடும் இவர், இரவு 11 மணிக்கு தான் அடைப்பார் என்று கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில் கடந்த 4 ம் தேதி இரவு எப்போதும் போல கடையில் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். இரவு 10 மணியளவில் கீரைத்துறையைச் சேர்ந்த கார்த்தி(24), கரண்(21) ஆகிய இரண்டு வாலிபர்கள் கடைக்கு வந்து வாழைப்பழம் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது கடையில் கூட்டமாக இருந்திருக்கிறது. இதனால் மூர்த்தி அந்த வாலிபர்களுக்கு வாழைப்பழம் கொடுக்க சிறிது தாமதமாகி உள்ளது. இதனால் அவர்கள் இருவரும் மூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.

வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், மூர்த்தியை தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் இருக்கும் கடைகளில் இருப்பவர்களை அழைப்பதற்காக வெளியே வந்திருக்கிறார். அப்போது அவரை மேலும் தாக்கிய வாலிபர்கள், ஓட ஓட விரட்டி அடித்து விட்டு சென்றிருக்கின்றனர்.

இதையடுத்து மூர்த்தி மதுரை விளக்குத் தூண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கார்த்தி, கரண் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

இதையும் படிங்க: பிரபல ரவுடி தலை துண்டாக்கி கொடூரமாக கொலை..! மர்ம கும்பல் வெறிச்செயல்..!