தமிழ்நாட்டில் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க வேண்டும் என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
MK Stalin Sets Targets DMK for 2026 Elections: மதுரை உத்தங்குடியில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 48 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உள்பட திமுகவின் அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு தீர்மானம்
இந்த பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்தும், தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுத்தல், இந்தி திணிப்பு, வக்பு வாரிய சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய பாஜக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் "மண் - மொழி - மானம் காத்திட 'ஓரணியில் தமிழ்நாடு' புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம்" என்ற சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
காலத்தின் கட்டாயம்
அந்த தீர்மானத்தை வாசித்த மு.க.ஸ்டாலின் கூறுகையில், ''எல்லாருக்கும் எல்லாம்' எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு
துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ்நாடு" என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. திமுக சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
திமுகவினருக்கு டார்கெட்
வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு. அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி - நகர ஒன்றிய பேரூர் - வட்ட கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும்.
புதிய உறுப்பினர் சேர்க்கை
அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது'' என்றார். மு.க.ஸ்டாலினின் இந்த தேர்தல் இலக்கை நிறைவேற்ற திமுக உடன்பிறப்புகள் உற்சாகமாக ஆயத்தமாகி வருகின்றனர்.
