திருமண மண்டபம் ஒன்றில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடிய சிறுவனை காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டுபிடித்தனர் .

மதுரையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் . இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை காளவாசல் பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் தனது இல்ல விழா ஒன்றை நடத்தினார் . இதற்காக பத்திரிகை அடித்து உறவினர்கள் , நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்திருந்தார் .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விழா நாளன்று மண்டபத்தில் அதிகளவில் கூட்டம் இருந்தது . மண்டபத்தின் ஒரு அறையில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ராஜ்குமார் வைத்திருந்தார் . திடீரென்று அந்த பணம் காணாமல் போனது . பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை .இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார் .

புகாரின் பேரில் மண்டபத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை செய்தனர் . அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர் .அதில் சந்தேகப்படும்படி சிறுவன் ஒருவன் நடந்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சிறுவனை பிடித்த காவல் துறையினர் அவனிடம் நடத்திய விசாரணையில் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளான். இதையடுத்து சிறுவனிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.