Asianet News TamilAsianet News Tamil

இனி சிறை தண்டனை தான்..! ஊரடங்கை மீறுபவர்களுக்கு இறுதி எச்சரிக்கை..!

இனி வரும் நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா நோயின் தீவிரம் உணர்ந்தும் முழு ஊரடங்கை மீறி பொது இடங்களில் வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபாரதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

heavy punishment will be imposed for violating lockdown rules
Author
Tamil Nadu, First Published Apr 24, 2020, 3:23 PM IST

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 23,077 எட்டியிருக்கும் நிலையில் 718 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 21 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தமிழகத்தில் மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

heavy punishment will be imposed for violating lockdown rules

இந்த நிலையில் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக அடுத்துவரும் நாட்களில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட இருக்கிறது. அதன்படி சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று பெருமாநகராட்சி பகுதிகளிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிராம புற பகுதிகளில் நோய் தொற்று கட்டுக்குள் இருந்த போதும் மக்கள் நெருக்கமாக வாழும் பெருநகரங்களில் வைரஸ் நோய் அதிக அளவில் பரவ வாய்ப்பு இருப்பதால் மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

heavy punishment will be imposed for violating lockdown rules

மேற்கண்ட நகரங்களில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அம்மா உணவகங்கள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகளை தவிர்த்து வேறு எந்த பணிகளும் செய்யக் கூடாது என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தநிலையில் இனி வரும் நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா நோயின் தீவிரம் உணர்ந்தும் முழு ஊரடங்கை மீறி பொது இடங்களில் வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபாரதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுவரை ஊரடங்கு நடைமுறைகளை மீறி பொதுவீதிகளில் வாகனங்களில் திரிந்ததாக 2,99,108 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 2,81,975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,52,943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அபராதத் தொகையாக 2.92 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios