மதுரை அருகே இரண்டரை வயது சிறுமி, பள்ளி வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அம்பட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பால்பாண்டியம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு மனிஷா என்கிற இரண்டரை வயது பெண் குழந்தை இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மனிஷா வீட்டு வாசலில் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் வீட்டின் முன் விளையாடி இருக்கிறார். அப்போது அந்த வழியாக சிந்துப்பட்டியிலிருந்து தனியார் பள்ளி வாகனம் ஒன்று வந்திருக்கிறது.

எதுவும் அறியாமல் விளையாடிக்கொண்டிருந்த மனிஷா மீது அந்த வாகனம் வந்த வேகத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த பால்பாண்டியம்மாள், குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி துடித்தார்.

அங்கிருந்தவர்கள் ஓட்டுனரை சிறை பிடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை கைது செய்ததோடு, அந்த வாகனத்தையும் காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

பள்ளிக்கு செல்லும் வயது கூட வராத சிறுமி, தனியார் பள்ளி வாகனம் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.