மதுரை கோயிலில் பிரியாணி திருவிழா! 200 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு தடபுடலான அன்னதானம்!
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் சாமிக்கு பலியிடப்பட்டன. இந்த பிரியாணியைச் சாப்பிட்டால் நீண்ட நாளாக இருந்துவரும் நோய் நொடிகள் கூட நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது.
![Biryani Festival at Madurai Temple! Unique feast with mutton and chicken sgb Biryani Festival at Madurai Temple! Unique feast with mutton and chicken sgb](https://static-ai.asianetnews.com/images/01hhnve3snx4j8qydtg44p7td9/biryani_363x203xt.jpg)
மதுரையில் வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் நடைபெற்ற வித்தியாசமான திருவிழாவில் நூற்றுக்கணக்கான கோழிகள் மற்றும் ஆடுகள் பலியிடப்பட்டு பிரியாணி சமைத்து பரிமாறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை பிரியாணி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு பிரியாணி திருவிழா 89வது ஆண்டாக நடைபெற்றது.
இந்தக் கோயில் புகழ்பெற்ற முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு குலதெய்வக் கோயிலாக இருந்து வருகிறது. இந்தக் கோவிலில் பிரியாணி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஒரு வாரம் காப்பு கட்டி விரதம் இருந்து விழாவில் கலந்துகொள்ள வருவார்கள்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை: யுஜிசி விளக்கம்
வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலையில் ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து கோயில் வரை தேங்காய், பழம், பூ ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் சாமிக்கு பலியிடப்பட்டன. தொடர்ந்து 2,500 கிலோ அரிசியில் 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் பிரியாணி சமைத்து சுவாமிக்குப் படைக்கப்பட்டது. பின்னர் அந்த பிரியாணி பக்தர்களுக்கு அன்னதானமாக பரிமாறப்பட்டது.
வடக்கம்பட்டி கிராம மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அன்னதானத்தில் பங்கேற்று பிரியாணி சாப்பிட்டனர். சாப்பிட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கும் பிரியாணி பிரசாதத்தை எடுத்துச் சென்றனர். இந்த பிரியாணியைச் சாப்பிட்டால் நீண்ட நாளாக இருந்துவரும் நோய் நொடிகள் கூட நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆம்லெட்டை 10 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.50 ஆயிரம் பரிசு! சவால் விடும் டெல்லி உணவகம்!