மதுரை அருகே சுற்றுலா வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் வட மாநில பெண்கள் மூவர் பலியாகினர்.

ஹரியானா மாநிலம் சார்ஜர் மாவட்டம் பகதூர் காட் பகுதியில் இருந்து 40 க்கும் மேற்பட்டோர் தென்மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தனர். அதன்படி கடந்த 6ம் தேதி டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் இருந்து கிளம்பிய அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டிருந்த அவர்கள் அதற்காக 2 சுற்றுலா வேன்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுமங்கலம்- விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் நேசசேரி விலக்கு அருகே வட மாநில சுற்றுலா பயணிகள் வந்த வேன் அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேன் ஓட்டுநர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் அதே சாலையில் தனியார் பேருந்து ஒன்று கோவையிலிருந்து களக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் தனியார் பேருந்து சுற்றுலா வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சுற்றுலா வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. தனியார் பேருந்து சாலையின் தடுப்பை தாண்டி நின்றது.

இந்த கோர விபத்தில் சுற்றலா வாகனத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்து கூச்சலிட்டனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் சாயர் (வயது 60) என்கிற பெண் உடல் நசுங்கி பலியானார். 15 பேர் பலத்த காயமடைந்திருந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்னிதேவி (62), சையத் ரத்னி (63) என மேலும் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவலர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் ஓட்டுநர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுத சீமான்..!