மதுரை அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மதுரை திருமங்கலத்தைத் சேர்ந்தவர் தினேஷ்(26). இவரது நண்பர்கள் பிரசன்னகுமார்(26), குணா(23). தினேஷிற்கு நேற்று பிறந்தநாள். இதனால் நண்பர்கள் அனைவரும் கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக ஒரு காரில் மதுரை பழங்காநத்தத்தில் இருக்கும் ஒரு போட்டோ ஸ்டுடியோவிற்கு சென்று விட்டு இரவு திருமங்கலம் திரும்பியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. வேடர்புளியங்குளம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல நொறுங்கி அதில் பயணம் செய்த மூன்று பெரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

அந்த பகுதியாக சென்றவர்கள் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.