மதுரையில் மரம் சாய்ந்து அரசுப்பள்ளி மாணவர்கள் 16 பேர் காயம்; முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
மதுரை மேலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 16 மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
![16 students were injured when a tree fell on Madurai government school vel 16 students were injured when a tree fell on Madurai government school vel](https://static-ai.asianetnews.com/images/01hhmc8svq2e5zj8z10skpk4dc/whatsapp-image-2023-12-14-at-20-08-28_363x203xt.jpg)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள பூவகை மரத்தின் அருகே அமர்ந்து தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மரம் உறுதி தன்மை இழந்து வேரோடு சாய்ந்து விழுந்ததில், 13 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் உட்பட 16 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து காயமடைந்த மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 16 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
16 மாணவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா மாணவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D