கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 31 பேருக்கு காஞ்சிபுரத்தில் கொரோனா உறுதியாகியுள்ளது.  

தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 4058 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில், டெல்லி தப்லிஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் ஆரம்பத்தில் பாதிப்பு எகிறிய நிலையில், அந்த பாதிப்பு எண்ணிக்கையையே ஓவர்டேக் செய்யும் சிங்கிள் சோர்ஸாக மாறியிருக்கிறது கோயம்பேடு.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் இருந்ததால் தமிழ்நாடு அரசும் மக்களும் ஆறுதல் அடைந்திருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் அதிகமானோருக்கு கொரோனா தொற்றிருப்பது தொடர்ந்து கண்டறியப்பட்டுவருவதால், மற்ற மாவட்டங்களிலும் கடந்த 3-4 நாட்களாக பாதிப்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. 

குறிப்பாக அரியலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. அரியலூரில் நேற்று வரை பாதிப்பு 34ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களது குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை பரிசோதிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. 

அதேபோல இன்று ஒரே நாளில் காஞ்சிபுரத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 31 பேர் கோயம்பேட்டுடன் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நேற்று வரை காஞ்சிபுரத்தில் 42ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. 

கோயம்பேட்டுடன் தொடர்புடையவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா உறுதியானதையடுத்து தான், கடலூரில் பாதிப்பு 229ஆகவும் விழுப்புரத்தில் 159ஆகவும் அதிகரித்தது. கள்ளக்குறிச்சியிலும் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.