கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மயானம் அருகே உள்ள நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த வதம்பசேரி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வரை வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனர். குறிப்பாக மயானத்திற்காக 19 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் மயானத்திற்கு மூன்று ஏக்கர் போக மீதமுள்ள நிலத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இதுவரை வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மயானம் அருகில் உள்ள இடத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அந்த நிலத்தை சுத்தம் செய்து வரும் பெண்கள் குடிசைகள் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் வட்டாட்சியர் நேரில் வந்து, வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதியளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது