கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த ஸ்வேதா என்பவரை அவரது கணவர் பாரதி நடுரோட்டில் வாக்குவாதத்திற்குப் பிறகு கத்தியால் குத்திக் கொலை செய்தார். தப்பியோட முயன்ற பாரதியை பொதுமக்கள் பிடித்து போலீஸ் விசாரணை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்வேதா (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்கள் ஏபிடி பழனியப்பா ரோடு பகுதியில் இருவரும் குடியேறியுள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்வேதா வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த போது, அவருடன் கணவர் பாரதி நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பாரதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்வேதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற பாரதியை சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரிடம் பாரதியை ஒப்படைத்தனர். இதனையடுத்து ஸ்வேதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
