கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களின் விசுவாசத்தைப் பாராட்டும் வகையில் நீண்ட காலமாக நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.14.5 கோடியை போனஸாக வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனம் 140 ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸாக வழங்கியுள்ளது. மென்பொருள் ஸ்டார்ட்அப்பான கோவை.கோ நிறுவுனம் செயல்திறனை விட ஊழியர்களின் விசுவாசத்திற்கு முன்னுரிமை அளித்து போனஸ் வழங்கியுள்ளது. நீண்ட காலமாக நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பாராட்டி, "டு கெதர் வி க்ரோ" என்ற நிறுவனத்தின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த போனஸ் வழங்கப்பட்டது.
2022 அல்லது அதற்கு முன்னர் நிறுவனத்தில் சேர்ந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்தது. தொடர்ந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நிறுவனத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள விசுவாசத்திற்காகவே இந்த போனஸ் வழங்கப்படுகிறது என்று மென்பொருள் தீர்வுகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரவணகுமார் தெரிவித்தார். ஊழியர்களுக்கு நன்றி, பாராட்டு மற்றும் சாதனையின் அடையாளமாக இது அமைகிறது என்றும் அவர் கூறினார். நிறுவனம் வழங்கிய தொகை ஊழியர்களின் நீண்டகால கனவுகளை நனவாக்க உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஊழியர்களின் அனைவரின் உழைப்பையும் மதித்து போனஸ் வழங்குவதில் செயல்திறன் அல்லது இலக்குகளை அடைவதை மட்டும் அளவுகோலாகக் கொள்ளக்கூடாது என்று நிறுவனம் முடிவு செய்ததாக அவர் கூறினார். ஒரு நிறுவனத்தின் வெற்றி அங்குள்ள ஊழியர்கள் நிறுவனத்தின் மீது கொண்டுள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், நிறுவனம் லாபம் ஈட்டும்போது, அதன் ஒரு பகுதி அதற்காக உழைத்த அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த சரவணகுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு குடிபெயர்ந்தார். ஐடி துறையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, சந்தையில் ஒரு இடைவெளியைக் கண்ட அவர், தனது சொந்த ஊரில் கோவை டாட் என்ற நிறுவனத்தை கோவையில் தொடங்க முடிவு செய்தார். இன்று, ஷெல், போயிங், பிபிசி உள்ளிட்ட பல வாடிக்கையாளர்கள் அவர்களின் சேவையைப் பெறுகின்றனர். சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோவை டாட் கோ, ஆண்டுக்கு 15 மில்லியன் டாலர் விற்பனை செய்கிறது.
