கோவையில் 10 வயது சிறுமியை கழுத்து, தோள் என 5 இடங்களில் கடித்து குதறிய வளர்ப்பு நாய்; சிறுமி படுகாயம்
சூலூர் அருகே பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி படுகாயம் அடைந்த நிலையில்,கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![10 years old girl highly injured while pet dog chase and bite in coimbatore vel 10 years old girl highly injured while pet dog chase and bite in coimbatore vel](https://static-ai.asianetnews.com/images/01hwqc9fk3ehxfa4s6972pempt/istockphoto-512335316-612x612--1-_363x203xt.jpg)
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவரது மகள் அக்ஷயா கீர்த்தி. 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமி அக்ஷயா கீர்த்தி, நேற்று மாலை அவரது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு நாய் ஆக்ரோஷமாக குரைத்தபடி சிறுமியை நோக்கி ஓடி வந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி நாயிடம் இருந்து தப்பித்துக் கொள்ள ஓடியுள்ளார். சிறுமி தவறி கீழே விழுந்து விட, அவர் மீது பாய்ந்த நாய் கழுத்து, தோள்பட்டை, காது என 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்து குதறி உள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர், சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவ மனையில் சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை மோகன் குமார் கூறுகையில், கடந்த 2022ம் ஆண்டு அக்ஷயா கீர்த்தியை இதே நாய் கையில் கடித்தது. அப்போது நாயின் உரிமையாளரிடம் நாயை கட்டி வைக்குமாறு கூறியும் அவர்கள் கட்டி வைக்கவில்லை. சாலையில் செல்வோரை நாய் அடிக்கடி துரத்தி வருகிறது. தற்போது மீண்டும் தனது மகளை இரண்டாவது முறையாக கடித்துள்ளது. தற்போது கூட நாயின் உரிமையாளர் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என குற்றம் சாட்டினார். மேலும் இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ள மோகன்குமார் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஐந்து வயது குழந்தை மற்றும் அவரது தாயை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவையில் 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.