மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றியதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். 

Anbumani Praises Online Gambling Prohibition Act: நாடாளுமன்ற மக்களவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. . ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இது சட்டமாக மாறும். இந்த மசோதா பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் கேம்களுக்கும் தடை விதிக்கிறது. இதையும் மீறி ஆன்லைன் சூதாட்ட சேவைகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம்

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றியதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு அன்புமணி பாராட்டு

இது தொடர்பாக அன்புமணி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப் பட்டதில் மகிழ்ச்சி: தற்கொலைகளும், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கும் முடிவு கட்டப்படும். பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு சட்டத்தால் பலன் இல்லை

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. அதனால், தமிழகத்தில் இரு முறை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டும் அதனால் பயன் இல்லை. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை சூதாட்டம் அல்ல, அவை திறன் விளையாட்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த சூதாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.

96 பேர் தற்கொலை

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திமுக அரசு இன்னும் விசாரணைக்கு கொண்டு வராததால், ஆன்லைன் சூதாட்டங்களையும் தடுக்க முடியவில்லை; அதனால் நிகழும் தற்கொலைகளையும் தடுக்க முடியவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் 96 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மத்திய அரசு தடுக்க வேண்டும்

இத்தகைய சூழலில் தான் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றையும் சூதாட்டம் என்று அறிவித்து அவற்றை தடை செய்வதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதுடன், உச்சநீதிமன்றத்திலும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும், பலர் தற்கொலை செய்து கொள்வதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.