நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இனி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்றும் காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு மத்தியிலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்

இந்த மசோதா இனி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் பிறகு சட்ட ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வந்தால், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்துவோர் அல்லது அதில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது நாட்டின் இளைஞர்கள் மற்றும் சமூகத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.