Chennai Corporation: பெருநகர சென்னை மாநகராட்சி, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 215 நிவாரண மையங்கள், 701 மருத்துவ முகாம்கள், 1,496 மோட்டார் பம்புகள் மற்றும் 22,000 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும்வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மாநகராட்சி என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.

* மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

* 27.10.2025 நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக 52.03 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 127.20 மி.மீ. மழைப்பொழிவும் (திருவொற்றியூர் மண்டலம்) குறைந்தபட்சமாக முகலிவாக்கம் பகுதியில் 7.80 மி.மீட்டர் மழையும் (ஆலந்தூர் மண்டலம்) பெய்துள்ளது.

* பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

* நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் 22.10.2025 முதல் நேற்று இரவு வரை மொத்தம் 4,12,150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்று 54,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

* பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 17.10.2025 அன்று முதல் 27.10.2025 வரை 510 நிலையான மருத்துவ முகாம்கள், 191 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 701 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 29,686 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று 15 மண்டலங்களிலும் 112 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைப்பெறுகிறது,

* தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 36 103 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

* தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 60 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 30 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

* மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 160 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. டிராக்டர் மேல் 550 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

* 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினிஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

* பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2. கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.

* 17.10.2025 முதல் 27.10.2025 வரை மழையின் காரணமாக விழுந்த 53 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.

* சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது.

* மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வண்டல் மண் பணிகள் சேகரிப்புத் தொட்டிகள் ஆகியவற்றில் தூர்வாரும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.