துரத்தும் புயல்... மிரட்டும் கனமழை - 20 விமானங்கள் ரத்து... சென்னையில் ஸ்தம்பித்து போன விமான சேவை
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருவதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
![Cyclone Michaung 20 flights cancelled in chennai airport due to heavy rain gan Cyclone Michaung 20 flights cancelled in chennai airport due to heavy rain gan](https://static-ai.asianetnews.com/images/01cwwn48vnfrag9me39f0kx4dr/chennai-airport-damage_363x203xt.jpg)
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதாலும் மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர சென்னைக்கு வரும் 8 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டு உள்ளன.
குறிப்பாக மும்பை, அபுதாபி, பஹ்ரைன், துபாய், கொழும்பு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டதை அடுத்து அந்த விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டு உள்ளன. சென்னையில் வானிலை சீரானதும் அந்த விமானங்கள் சென்னைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் சென்னையில் இருந்து துபாய், ராஜமுந்திரி, விஜயவாடா, திருச்சி, கொச்சி ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 10 விமானங்களும், அந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்கள் என மொத்தம் 20 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. துபாய், லண்டன், சிங்கப்பூர், டெல்லி உள்பட 14 புறப்படும் விமானங்களும், 12 வருகை விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக வந்து சேரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... விடிய விடிய வெளுத்துவாங்கிய மழை... சென்னையில் அதிகபட்ச மழைப்பதிவு எங்கே? முழு விவரம் இதோ