தொழில்நுட்ப கோளாறு; சென்னையில் இருந்து 5 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் - பயணிகள் அவதி
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விமானம் சுமார் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
![chennai to singapore flight air india flight delayed 5 hours due to technical error in chennai airport vel chennai to singapore flight air india flight delayed 5 hours due to technical error in chennai airport vel](https://static-ai.asianetnews.com/images/01hgtgygt5xtraeemcrwkjevwq/screenshot-2023-12-04-185115-png_363x203xt.jpg)
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். இந்த விமானத்தில் 186 பயணிகள் செல்ல சோதனைகளை முடித்து விட்டு காத்து இருந்தனர். இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நள்ளிரவு 11.50 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தது. மீண்டும் அதிகாலை 2 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் விமானத்தை இயக்கி வந்த விமானி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது அதை சரி செய்த பின் விமானத்தை இயக்கவும் என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டார்.
இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் 186 பேரும் விமானத்தில் ஏற்றப்படாமல் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட நேரமாக காத்து இருந்த பயணிகள், அவ்வப்போது விமான அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காலையில் சரி செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். இதை அடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 மணி நேர தாமதமாக காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. இதனால் 186 பயணிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளானார்கள்.