அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ADMK Edappadi Palaniswami Made His First Promise For The 2026 Elections: திருப்பத்தூரில் இன்று அரசு விழாவில் பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், ''ஒன்றியத்தில் இருக்கின்றவர்கள் தமிழ்நாட்டு மக்களை மதத்தால் சாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களால் முடியாதபோது, இங்கு இருக்கக்கூடிய அ.தி.மு.க. கட்சியையும் சேர்த்துக்கொள்கிறார்கள். நாம் கேட்பது, நாட்டில் வளர்ச்சி சரிகிறது... மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது... வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால், பி.ஜே.பியும், அதிமுகவும் மக்களைப்பற்றி கவலைப்படாமல், மதத்திற்காக கவலைப்படுகிறார்கள்! இதுதான் அவர்களுடைய அரசியல்.
அதிமுக வேடிக்கை பார்க்கிறது
இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண். பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண். தலைவர் கலைஞர் அவர்களால், வளர்க்கப்பட்ட மண். இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம். அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள். நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது! தமிழ்நாடும், தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களும் எதிரிகளுக்கும், எதிரிகளுக்கு துணை போகும் துரோகிகளுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்'' என்றார்.
திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதல்வர்
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், ''நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், "அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது" என்கிறார்.
திமுகவுக்கு அருகதை இருக்கா?
அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? "அண்ணா- இதய மன்னா" என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுக-வை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.
எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை
ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!
யாரை ஏமாற்றுகிறார் ஸ்டாலின்?
இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்? கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்! தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்!
2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி
திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்! இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி'' என்று கூறியுள்ளார்.
