சென்னை உயர்நீதிமன்ற மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். அந்த சிறுமி ஏன் தற்கொலை முயன்றார்? என்பது குறித்து விரிவாக காண்போம்.

15 Year Old Girl Jumping From Chennai High Court Floor: சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவின் முக்கியமானநீதிமன்றங்களில் ஒன்றாக உள்ளது. தினமும் பல்வேறு முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்படுவதால் சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், உயர்நீதிமன்ற மாடியில் இருந்து சிறுமி ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்ற மாடியில் இருந்து கீழே குதித்த சிறுமி

அதாவது தற்கொலைக்கு முயன்றது 15 வயது சிறுமி என்பது தெரியவந்துள்ளது. அதாவது உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த ஆள்கொணர்வு வழக்கு விசாரணையில் நீலாங்கரையை சேர்ந்த அந்த 15 வயது சிறுமி ஆஜரானார். இந்த விசாரணையின்போது சிறுமியை அரசு காப்பகத்திற்கு அழைத்து செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலர்கள், வழக்கறிஞர்கள் அதிர்ச்சி

இதனால் மன வேதனை அடைந்த சிறுமி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாடியில் இருந்து விழுந்ததில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமியின் முடிவுக்கு காரணம் என்ன?

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 15 வயது சிறுமி தற்கொலை முயன்ற காரணம் என்ன? சிறுமி எந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி ஆஜரான வழக்கு விவரங்கள் தெரியவில்லை. வழக்கு விவரம் முழுமையாக கிடைத்தால் சிறுமி தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறுமி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.