சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் யுகி பாம்ப்ரி முன்னேற்றம்...
ஆண்கள் ஒற்றையர் சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் 100 இடங்களுக்குள் முன்னேறி உள்ளார் இந்தியாவின் யுகி பாம்ப்ரி.
முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான யுகி பாம்ப்ரி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 100 வீரர்களுக்குள் இடம் பெற்றார். எனினும் அவருக்கு ஏற்பட்ட தொடர் காயங்கள் காரணமாக தரவரிசைப் பட்டியலில் சறுக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடும் பயிற்சியின் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தைபே சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் யுகி முதலிடம் பெற்றார். இதனையடுத்து அவர் தரவரிசைப் பட்டியலில் 83-வது இடத்துக்கு தகுதி பெற்றுள்ளார்.
முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றால் அந்த வீரர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், ஏடிபி 1000 சீரிஸ் மாஸ்டர் போட்டிகளில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை தற்போது யூகி பெற்றுள்ளார்.
மற்றொரு வீரரான ராம்குமார் ராமநாதன் 116-வது இடத்திலும், சுமித் நகல் 215, பிரஜ்னீஷ் குணேஸ்வரன் 266-வது இடத்திலும் உள்ளனர். ரோஹன் போபண்ணா 19-வது இடத்தில் உள்ளார்.
இரட்டையவர் பிரிவில் டிவிஜே சரண் 41-வது இடத்திலும், பயஸ் 49-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா 194-வது இடத்தில் உள்ளார்.
இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது இடத்திலும் உள்ளனர்.