காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலை நீக்குவதால் இளம் வீரர்கள் பாதிக்கப்படுவர் - ஜித்துராய் கவலை....
2022-ல் பர்மிங்ஹாம் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலை நீக்குவதால் இளம் வீரர்கள் பாதிக்கப்படுவர் என்று பிரபல வீரர் ஜித்துராய் கவலை தெரிவித்துள்ளார்..
கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இராணுவத்தில் பணிபுரியும் பல்வேறு வீரர்களும் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு இராணுவம் சார்பில் பாராட்டு விழா புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் வீரர்களை வரவேற்று கெளரவித்தார்.
இதில் பங்கேற்ற ஜித்துராய், "வரும் 2022-ல் பர்மிங்ஹாம் போட்டியில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
காமன்வெல்த் போட்டிகளில் இதில் நாம் அதிக பதக்கங்களை வென்று வருகிறோம். நமது இளம் வீரர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இது தகர்த்து விடும்.
எதுவும் எங்கள் கைகளில் இல்லை. எங்களால் சுட மட்டுமே முடியும். போட்டி அமைப்புக் குழு, அரசின் கைகளில் தான் துப்பாக்கி சுடுதலை இடம் பெறச்செய்வது உள்ளது.
துப்பாக்கி சுடுதல் இடம் பெறும் என நம்பிக்கை உள்ளது. அவ்வாறு இல்லாமல் போனால் இந்தியா 2022 போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய ரைபிள் சங்கம் கூறியுள்ளது நான் ஏற்கிறேன்.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் கடின பயிற்சியால், கோல்ட்கோஸ்டில் தங்கம் வென்றதால் சரி செய்யப்பட்டுவிட்டது. உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியே உடனடி இலக்கு.
கொரியாவில் வரும் 20 முதல் 30-ஆம் தேதி வரை நடக்கவுள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜித்துராய் உள்பட இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.