செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிய இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ்..!
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இளம் கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிவைத்தனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் முதல் முறையாக இந்தியாவில் நடக்கிறது. தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 29) முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடந்தது.
தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஏற்றிவைத்தனர்.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டெல்லியிலிருந்து புறப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி இந்தியா முழுவதும் 75 நகரங்களை சுற்றி சென்னை வந்தடைந்தது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். பிரதமரிடமிருந்து ஜோதியை பெற்ற இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிவைத்தனர்.