உலக ஹாக்கி லீக்: முதல் முறையாக இறுதிச்சுற்றில் கால்பதிக்கிறது அர்ஜென்டீனா...
உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவை அர்ஜென்டீனா முதல் முறையாக இறுதிச் சுற்றில் கால்பதித்துள்ளது.
உலக ஹாக்கி லீக் போட்டி ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஹாக்கி போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டீனாவை எதிர்கொண்டது இந்தியா.
விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா தடுமாறியது. 4-வது நிமிடத்தில் அர்ஜென்டீனாவின் கோல் முயற்சியை ஆரம்பத்தில் தடுத்தாலும் ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அர்ஜென்டீனாவுக்கு முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதை மிகச் சரியாக பயன்படுத்திய அணியின் கொன்ஸாலோ பெய்லாட் அதை அருமையான கோலாக மாற்றினார். இதனால் அர்ஜென்டீனா 1-0 என முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், இந்தியாவுக்கான பின்னடைவாக ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் மன்பிரீத் சங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு 10 நிமிடங்களுக்கு அவர் வெளியேற்றப்பட்டார். இதனால், இந்தியா 10 நபர்களுடன் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இவ்வாறாக முதல் பாதியில் முடிவடைந்தது.
அர்ஜென்டீனா 1-0 என முன்னிலையுடன் தொடங்கிய 2-வது பாதியிலும் அந்த அணியின் கையே ஓங்கியிருந்தது.
ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து கிடைத்த 2 பெனால்டி வாய்ப்புகளும் ரூபிந்தர் சிங்கால் வீணடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா கோல் அடிக்க இயலாமல் போனதால், 0-1 என்ற கணக்கில் வீழ்ந்தது.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. கடந்த சீசனில் இந்தியா வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.