இந்தியாவில் விரைவில் மகளிர் ஐபிஎல் போட்டி - ஹர்மன்பிரீத் கெளர் எதிர்ப்பார்ப்பு…
இந்தியாவில் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் விரைவில் தொடங்கப்படும் என்றும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்மன்பிரீத் கெளர்.
இந்தாண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் ஹர்மன்பிரீத் கெளரும் ஒருவர். இந்த விருது டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்மன்பிரீத் கெளர் கூறியது:
“விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசிடம் இருந்து எந்த மாதிரியான அங்கீகாரம் கிடைத்தாலும், அது அவர்களுடைய நம்பிக்கையை அதிகரிப்பதாக அமையும்.
அர்ஜுனா விருதைப் பெற வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்கும். இந்த மதிப்புமிக்க விருதுக்கு என்னை தேர்வு செய்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். இது, இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான உந்துதலை எனக்கு அளிக்கும்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நடைபெறும் மகளிர் டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தியாவில் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். அது தொடர்பாக பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. விரைவில் மகளிர் ஐபிஎல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.