இந்திய அணியில் இருந்து கம்பீர் நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்!! தெரியுமா உங்களுக்கு..?
இந்திய அணியில் இருந்து கம்பீர் நீக்கப்பட்டதற்கே அவரது நடத்தைதான் காரணம் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் சிறந்த வீரராக வலம்வந்த கம்பீர், இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தவர். சிறந்த பேட்ஸ்மேன், நல்ல ஃபீல்டர். நல்ல அர்ப்பணிப்பான வீரர். 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளில் விளையாடியவர். தோனி தலைமையில் இந்திய அணி 2011 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.
2011 உலக கோப்பை இறுதி போட்டியில், தொடக்கத்திலேயே சச்சின், சேவாக் ஆகிய இரு முக்கியமான வீரர்களின் விக்கெட்டை இழந்த இக்கட்டான நிலையில், நிதானமாக ஆடி 97 ரன்களை குவித்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தவர்.
ஆனால், அதற்குப்பிறகு திடீரென இந்திய அணியில் நிராகரிக்கப்பட்டார். தோனி இல்லாத போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர். 2011ம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த தொடரில் காயம் காரணமாக இந்தியா திரும்பிய கம்பீருக்கு அதன்பிறகு அணியில் இடம் மறுக்கப்பட்டது.
தொடர் தோல்விகளால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கம்பீர் விலகிய நிலையில், முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல், ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், கம்பீர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எழுதியுள்ளார்.
அதில், யங் ஆங்ரி மேன் கம்பீர் இந்திய அணியில் இருந்தபோது அவரை, இந்திய கிரிக்கெட்டின் அமிதாப் பச்சன் என்றுதான் அழைப்பேன். கம்பீர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு அவரது நடத்தைதான் காரணம். 2011 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது பவுன்ஸ் பந்து ஒன்று கம்பீரை காயப்படுத்தியது. அது பெரிய காயமல்ல; அதனால் விரைவில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தும் அவர் அந்த தொடரில் ஆடாமல் இந்தியாவிற்கு திரும்பிவிட்டார்.
அதன்பிறகு ஷிகர் தவானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஷிகர் தவானும் முரளி விஜயும் வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடினர். அதன்பிறகு கம்பீர் அணியில் இடம்பெறவில்லை. அதற்கு முன்னதாக என்னுடன் நல்ல நட்பில் இருந்துவந்த கம்பீர், அணியில் இடம் கிடைக்காததால் அதற்கு பிறகு என்னுடனான நட்பையே முறித்துக்கொண்டார் என எழுதியுள்ளார்.