அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர் மது குடும்பத்துக்கு நிதியுதவி…. நெகிழ வைத்த வீரேந்திர சேவாக்….
கேரளாவில் உணவு பொருட்கள் திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் மதுவின் குடும்பத்துக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஒரு கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடியதாக பழங்குடியின இளைஞர் மது என்பவரை 16 பேர் கொண்ட ஒரு கும்பல் அடித்துக் கொன்றது.
மதுவின் கைகளை கட்டிவைத்து அடித்தும், அவருடன் செல்பி எடுத்தும் அந்த கும்பல் மனிதநேயமின்றி நடந்து கொண்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நாடுமுழுவதும் பெரும் கண்டனத்துக்கு ஆளானது.
அந்த பழங்குடி இளைஞர் குற்றுயிரும், குலைஉயிருமாக இருக்கும் போது, போலீஸார் வந்து அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.இதையடுத்து அவரை கொலை செய்த வழக்கில் போலீஸார் பலரைக் கைது செய்தனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மதுவின் வீட்டுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறியதோடு நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு நிதியுதவியும் வழங்கினார். இறந்த மதுவின் சகோதரிக்கு கேரள காவல் துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை சமூக ஊடங்களில் பார்த்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், மிகுந்த கோபத்துடன் தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் வறுமையில் வாடும் மதுவின் குடும்பத்துக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் நிதியுதவி வழங்கியுள்ளார். சேவாக் தனது அறக்கட்டளையில் இருந்து ரூ.1.50 லட்சம் பணத்தை மதுவின் தாயாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மனிதாபிமானத்துடன் சேவாக் செய்திருக்கும் இந்த காரியத்தை பொது மக்களும், நெட்டிசன்களும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.