Unconditional apology Supreme Court order for Anurak tagoor

பிசிசிஐ முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விசாரணையை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கொண்டது.

இந்த வழக்கில் அனுராக் தாக்குர் மன்னிப்பு கோரி முன்னதாக சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தது.

மேலும், அனுராக் தாக்குர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும் வகையில் ஒரு பக்க அளவிலான சுருக்கமான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அத்துடன், அனுராக் தாக்குர் அவ்வாறு மன்னிப்பு கோரும் பட்சத்தில் அதனை ஏற்று, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

பின்னர், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அன்றைய தினம் அனுராக் தாக்குர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதனிடையே, விசாரணையின்போது அனுராக் தாக்குர் தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் பி.எஸ்.பட்வாலியா, 'அனுராக் தாக்குர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக உள்ளபோதிலும், அவர் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கான முகாந்திரம் உள்ளது' என்று நீதிமன்ற அமர்விடம் தெரிவித்தார்.