மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு இந்திய அணி வீரர்கள் தங்களது ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஊதியத்தை கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். 

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு இந்திய அணி வீரர்கள் தங்களது ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஊதியத்தை கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள 80 அணைகளும் திறக்கப்பட்டன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரள மாநிலம் முழுவதுமே மூழ்கியது. வெள்ளத்தால் அம்மாநிலம் முழுவதும் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ரூ.20,000 கோடி மதிப்பிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய அரசு ரூ.600 கோடி இடைக்கால நிவாரணமாக அளித்துள்ளது. மத்திய அரசை தவிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் கேரளாவிற்கு நிதியுதவி அளித்துள்ளன. பிரபலங்களும் தனிநபர்களும் தங்களால் இயன்ற நிதியை கேரளாவிற்கு அளித்துவருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன், போட்டிக்கு பின்னர் பேசியபோது, இந்த வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். அவரது பேச்சிற்கு டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். 

இதையடுத்து இந்திய அணி வீரர்களின் ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஊதியத்தை கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்க உள்ளனர். டெஸ்ட் அணியில் ஆடும் அனைத்து வீரர்களின் ஊதியத்தையும் சேர்த்தால் சுமார் ரூ.2 கோடி வரும். அந்த தொகையை கேரளாவிற்கு நிவாரண நிதியாக வழங்கி உள்ளனர். 

கேரளாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், ரூ.15 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.