கடைசிவரை களத்தில் நிராயுதபாணியாக நின்ற ரஹானே!! பவுலிங்கில் மிரட்டி ஹைதராபாத் மீண்டும் வெற்றி
பவுலிங்கில் சிறந்து விளங்கும் ஹைதராபாத் அணி, இலக்கை எட்டவிடாமல் ராஜஸ்தானை சுருட்டி மீண்டும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், 6 ரன்களில் வெளியேறினார். அலெக்ஸ் ஹேல்ஸும் வில்லியம்சனும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 45 ரன்களில் வெளியேறினார். அரைசதம் கடந்த கேன் வில்லியம்சன் 63 ரன்களில் அவுட்டானார்.
மனீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹாசன், யூசுப் பதான், சஹா ஆகியோர் சிறப்பாக ஆடாததால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத் அணி.
152 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் திரிபாதி, 4 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ரஹானேவுடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. அதிரடியாக ஆடிய சாம்சன், 40 ரன்களில் வெளியேற, அவரை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லோம்ரார் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒரு புறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ, மறுபுறம் கேப்டன் ரஹானே தனி நபராக போராடினார். ஆனாலும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை அதிரடியாக ஆட முடியாமல் ரஹானே திணறினார். ரஹானே களத்தில் நின்றாலும் அவரை அதிரடியாக ஆடி ரன்களை குவிக்காத அளவிற்கு ஹைதராபாத் பவுலர்கள் பந்துவீசினர்.
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஹானே ஆர்ச்சர் ஜோடியால் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து ஹைதராபாத் அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.