ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடவும் தடை - பிசிசிஐ அதிரடி...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தடை விதித்துள்ளது.
பந்தை சேதப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டார். இப்போது அவரும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேப்டனாக விளையாட இருந்த வார்னரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய தலைமை கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் ஸ்மித், வார்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்ட் ஆகியோர் மீது நேற்று தடை நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, கேப்டனாக இருந்த ஸ்மித், துணை கேப்டனாக இருந்த வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
பான்கிராஃப்ட், ஒன்பது மாதங்கள் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளார். இந்த தடையை எதிர்த்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் மேல்முறையீடு செய்ய மூன்று வீரர்களுக்கும் ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.