st joseph got first place in male and female section

61-வது மாநில சீனியர் தடகளப் போட்டியில் செயிண்ட் ஜோசப் அணி ஆடவர், மகளிர் பிரிவில் முதலிடம் பெற்று அசத்தல்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் சங்கரன்கோவில் ஏவிகே கல்விக் குழுமம், திருநெல்வேலி மாவட்ட தடகள சங்கம் ஆகியவற்றின் சார்பில் 61-வது மாநில சீனியர் தடகளப் போட்டி நடைப்பெற்றது.

இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 1200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

அதன்படி, ஆடவர் பிரிவில் செயின்ட் ஜோசப் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அணி 121 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அரைஸ் ஸ்டீல் அத்லெட் அகாதெமி 59 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 

மகளிர் பிரிவில் செயின்ட் ஜோசப் அகாதெமி அணி 72 புள்ளிகளுடன் முதலிடத்தையும், அரைஸ் ஸ்டீல் அத்லெட் அகாதெமி அணி 50 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தன. 

இதன்மூலம் செயின்ட் ஜோசப் அகாதெமி 193 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 

சிறந்த தடகள வீரராக 1082 புள்ளிகள் பெற்ற அரைஸ்டீல் அத்லெடிக் அகாதெமியின் பிரவீணும், சிறந்த தடகள வீராங்கனையாக 1,060 புள்ளிகள் பெற்ற இந்தியன் வங்கியின் சந்திரலேகாவும் தேர்வு செய்யப்பட்டனர். 

பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சுகுணா சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்கச் செயலர் லதா, திருநெல்வேலி தடகள சங்கத் தலைவர் ஐயாதுரை பாண்டியன், பயிற்சியாளர் சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றார்.