இந்திய பேட்டிங்கை கண்டு அசந்துபோன தென்னாப்பிரிக்க “கோச்”!!
தவறான பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக அடித்து ஆடுகின்றனர் என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் டேல் பென்கென்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, வெறும் 118 ரன்களுக்கே சுருண்டது. சாஹல், குல்தீப் ஆகிய இரு ரிஸ்ட் ஸ்பின்னர்களும் இணைந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்களின் சுழற்பந்தை சமாளிக்க முடியாத தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மட்டுமே அவுட்டானார். கோலியும் தவானும் அதிரடியாக ஆடி இலக்கை எட்டினர். இந்த போட்டி முழுவதுமே பவுலிங் மற்றும் பேட்டிங்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.
போட்டி முடிந்ததும் பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் டேல், எங்கள் வீரர்கள் சில பந்துகளை அடித்து, ரன்களை உயர்த்த முயன்ற போது அது இந்திய வீரர்களின் கைகளுக்கு சென்று விக்கெட்டாக மாறியது. இதனால் விக்கெட் பயத்தில் எங்கள் வீரர்கள் அடித்து ஆட பயந்தனர். சாஹல் மற்றும் குல்தீப்பின் சுழற்பந்துகள் முற்றிலும் மாறுபட்ட வகையில் இருந்தது. அது எங்கள் வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.
ஆனால், சுழற்பந்துகளை இந்திய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர். எளிதான பந்துகளை அவர்கள் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கு அனுப்பி ரன்களை குவிக்கின்றனர். இதன்மூலம் சுழற்பந்தை எதிர்கொள்ளும் விதத்தை அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டோம் என தெரிவித்தார்.
இந்திய வீரர்களின் சிறப்பான பேட்டிங்கை புகழ்ந்ததோடு அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டோம் என தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் கூறியிருப்பது இந்திய அணியினருக்கு மேலும் உத்வேகத்தை வழங்கியுள்ளது.