Sania Mirza: ஓய்வு அறிவித்தார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா..! ரசிகர்கள் அதிர்ச்சி
2022ம் ஆண்டு பருவத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.
35 வயதான இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்திருக்கிறார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்சா தான். கடந்த ஆண்டு செப்டம்பரில் இரட்டையர் பிரிவில் 43வது பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில், மகளிர் இரட்டையர் பிரிவில் நாடியாவுடன் இணைந்து ஆடிய சானியா மிர்சா தோல்வியடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்திருந்தாலும், அடுத்ததாக ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடவுள்ளார்.
இந்நிலையில், மகளிர் இரட்டையர் பிரிவில் அடைந்த தோல்விக்கு பிறகு, தனது ஓய்வு முடிவை அறிவித்தார் சானியா மிர்சா. இதுகுறித்து பேசிய சானியா மிர்சா, இதுவே டென்னிஸில் எனது கடைசி பருவம். என்னால் இப்போது காயமடைந்தால் உடனடியாக தேறமுடியவில்லை. காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸ் பெற அதிக காலம் எடுக்கிறது. 3 வயது மகனுடன் பயணம் செய்வதால், அவனுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இந்த போட்டியில் ஆடும்போது கூட எனது கால் வலித்தது. ஆனால் அதை தோல்விக்கான காரணமாக கூறவில்லை. ஆனால் அதேவேளையில் என்னால் இப்போதெல்லாம் காயத்திலிருந்து மீள அதிக காலம் எடுக்கிறது. எனவே இந்த பருவத்துடன் ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன் என்றார் சானியா மிர்சா.
கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்ட சானியா மிர்சாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையுடன் பயணம் செய்வதும் தனக்கு கடினமாக இருப்பதாக சானியா மிர்சா கூறினார்.