என் பொண்ணு நாட்டுக்கு தங்கம் வாங்கி கொடுத்தா..! நீ என்ன கிழிச்ச சித்தார்த்.? நறுக்குனு கேட்ட சாய்னாவின் தந்தை
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமான பதிவை இட்ட நடிகர் சித்தார்த் நாணி குறுகுமளவிற்கு சாய்னா நேவாலின் தந்தை ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமான கருத்து கூறிய விவகாரத்தில், நடிகர் சித்தார்த் சிக்கி சின்னாபின்னமாகிவருகிறார். சமூக பிரச்னைகள் குறித்தும் தனது அரசியல் பார்வை குறித்தும் சமூக வலைதளங்களில் தனது கருத்தை வெளிப்படையாக பதிவிடுவது நடிகர் சித்தார்த்தின் வழக்கம். சில நேரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பிரச்னைகளிலும் மாட்டிக்கொள்வார்.
அந்தவகையில், சாய்னா நேவால் குறித்த சித்தார்த்தின் டுவீட்டை ஒருவர் கூட ரசிக்கவில்லை. ஏனெனில் நாட்டுக்காக விளையாடி பதக்கங்களை வென்று கொடுத்த சாய்னா நேவால் குறித்து மிகவும் ஆபாசமாக டுவீட் செய்திருந்தார் சித்தார்த்.
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றபோது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தையடுத்து, தான் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.
பிரதமரின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதமான போராட்டக்காரர்களின் செயல்பாட்டிற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார் சாய்னா நேவால். இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பிரதமருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலை கொச்சைப்படுத்தும் விதமாக டுவீட் செய்திருந்தார்.
சித்தார்த்தின் கருத்துக்கு கண்டனம் வலுத்துவருகிறது. திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சாய்னா நேவாலுக்கு ஆதரவாகவும், சித்தார்த்துக்கு எதிராகவும் குரல் கொடுத்துவருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மகாராஷ்டிரா காவல்துறை டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக சமாளிக்க முயன்றார் சித்தார்த். ஆனால் சித்தார்த்தின் முயற்சி பலனளிக்கவில்லை. அனைவரும் அவருக்கு எதிராக கொந்தளிக்கின்றனர்.
இந்நிலையில், தனது மகள் சாய்னா நேவால் குறித்து சித்தார்த் பேசிய கருத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் சாய்னா நேவாலின் தந்தை ஹர்வீர் சிங். டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய ஹர்வீர் சிங், எனது மகள் நாட்டுக்காக பல பதக்கங்களையும் விருதுகளையும் வென்று கொடுத்திருக்கிறார். சித்தார்த் படங்களில் நடிப்பதை தவிர வேறு என்ன செய்திருக்கிறார்? நாட்டுக்காக ஏதாவது செய்திருக்கிறாரா? என ஆவேசத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார். தனது மகள் குறித்த சித்தார்த்தின் ஆபாச கருத்தால் கண்ணீரும் சிந்தினார் சாய்னாவின் தந்தை.