SAFF Championship Indian Women Winning Victory in Nepal

தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியின் குரூப் சுற்றில் இந்திய மகளிரணி 10-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.

தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியின் 15 வயதுக்கு உள்பட்ட (யு-15) பிரிவினருக்கான போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்றைய ஆட்டத்தில் நேபாளத்தை எதிர்கொண்டது இந்தியா. ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் இந்தியாவின் லின்டா கோம் அணியின் கோல் கணக்கை தொடங்கினார். அவரே 32-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இந்திய அணி, முதல் பாதிக்குள்ளாகவே மேலும் மூன்று கோல்களை பதிவு செய்தது. இதில் சுனிதா 33-வது நிமிடத்திலும், சந்தியா 40-வது நிமிடத்திலும், பிரியங்கா 43-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இந்தியா 5-0 என முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின்போது பிரியங்கா 53-வது நிமிடத்திலும், சுனிதா 62-வது நிமிடத்திலும் தங்களது 2-வது கோலை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், மற்றொரு இந்திய வீராங்கனையான அனய் பாயி, 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியின் கோல் கணக்கை 8-ஆக உயர்த்தினார். இதனிடையே, பிரியங்கா தேவி, சுனிதா முன்டா ஆகியோர் ஹாட்ரிக் கோல் அடித்தனர்.

பிரியங்கா 76-வது நிமிடத்திலும், சுனிதா 86-வது நிமிடத்திலும் தங்களது 3-வது கோலை அடித்து நேபாளத்திற்கு ஒரு கோல் வாய்ப்பை கூட கொடுக்காமல் 10-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.