கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் கேப்டன் கோலி…
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் பெற்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஐசிசி, நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இந்திய கேப்டன் விராட் கோலியின் புள்ளிகள் 873-இல் இருந்து, 887-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஒருநாள் தரவரிசையில் 887 புள்ளிகள் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை சச்சின் பெற்றிருந்தார். தற்போது அந்த சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் 2 சதங்கள் விளாசியதன் மூலம் கோலி இந்த ஏற்றத்தை அடைந்துள்ளார்.
ரோஹித் சர்மா, தோனி ஆகியோரும் பட்டியலில் ஏற்றம் கண்டுள்ளனர். அத்தொடரில் இரு சதங்கள் உள்பட மொத்தமாக 302 ஓட்டங்கள் குவித்த ரோஹித் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்துக்கு வந்துள்ளார்.
அதே தொடரில் மொத்தம் 162 ஓட்டங்கள் எடுத்த தோனி 2 இடங்கள் ஏற்றம் கண்டு 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில், 27 இடங்கள் முன்னேறி, முதல் முறையாக 4-வது இடத்துக்கு வந்துள்ளார்.
இதேபோல், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 20-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஹார்திக் பாண்டியா 2 இடங்கள் முன்னேறி 61-வது இடத்துக்கும், குல்தீப் யாதவ் 21 இடங்கள் முன்னேறி 89-வது இடத்துக்கும், யுவேந்திர சாஹல் 55 இடங்கள் முன்னேறி 99-வது இடத்துக்கும் வந்துள்ளனர்.
அணிகளுக்கான தரவரிசையில் 3-வது இடத்தில் நீடிக்கிறது இந்தியா என்பது கொசுறு தகவல்.