Ravi Shastri became chief coach Jagir Khan appointed as bowling coach

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் இயக்குநரான ரவி சாஸ்திரியும், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜாகிர் கானும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “கிரிக்கெட் ஆலோசனைக் குழு பரிந்துரையின்படி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஜாகிர் கானையும் நியமிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் இருப்பார்கள்” என்று கூறியுள்ளது.

கங்குலி, சச்சின், வி.வி.எஸ். லஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு, பயிற்சியாளர் பதவிக்கான நேர்க்காணலை திங்கள்கிழமை மேற்கொண்டது.

பயிற்சியாளர் யார் என்பதை அறிவிக்க கால அவகாசம் வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்து இருந்தது. ஆனால், பயிற்சியாளர் நியமன அறிவிப்பை செவ்வாய்க்கிழமை மாலை பிசிசிஐ வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் அறிவுறுத்தினார்.

அதன்படி இந்திய அணியின் மேலாளராக 2007-ல் பொறுப்பு வகித்த ரவி சாஸ்திரி, 2014 ஆகஸ்ட் முதல் 2016 ஜூன் வரையில் அணியின் இயக்குநர் பொறுப்பில் இருந்தார். தற்போது 2017 முதல் 2019 வரையிலான காலகட்டதிற்கு அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்தது.