ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இருமுறை தங்கம் வென்ற ஜஜாரியா பரிந்துரை...
ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
விளையாட்டுத் துறையில் நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள், விளையாட்டு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை வருடந்தோறும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான அர்ஜூனா விருது, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாசார்யா விருது, ராஷ்ய கேல் புரோட்ஸஹான் விருது ஆகிய விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த வருடம் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் தங்கம் வென்றார் தேவேந்திர ஜஜாரியா. தங்கம் வென்றதோடு, தனது பழைய உலக சாதனையையும் முறியடித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜஜாரியா எட்டு வயது சிறுவனாக இருந்தபோது மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் தனது இடது கையை இழந்தார். ஒரு கையை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல், ஜஜாரியா ஈட்டி எறிதலில் அசத்தினார்.
2004-ல் அர்ஜுனா விருதைப் பெற்ற இவர் அதன்பிறகு 2012-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். அதன்மூலம் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் பாரா ஒலிம்பிக் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த நிலையில் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஜஜாரியா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.