rahul shared interesting fact about virat kohli
இந்திய கேப்டன் விராட் கோலியின் அடையாளமாக திகழ்கிறது அவரது தாடி. முன்பெல்லாம் வீரர்கள் தாடி, மீசை இல்லாத வெறும் முகத்துடன் இருப்பது வழக்கம். அப்போது, ஹர்பஜன் சிங் மட்டும் தான் தாடி வைத்திருப்பார்.
ஆனால், தற்போதைய இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் தாடி வைத்திருக்கிறார்கள். இந்த டிரெண்டை உருவாக்கியவர் கோலி என்றே சொல்லலாம். தாடி வைக்க விரும்பும் கோலி, அவரது முகத்திற்கு ஏற்ற வகையில் தாடி வைத்துக்கொண்டார். கோலியின் தீவிர ரசிகர்களும் அவரைப்போலவே தாடி வைத்துள்ளனர்.
தாடி மீது பற்றுள்ள கோலி, அதை மிகக்கவனத்துடனும் ஆர்வத்துடனும் பராமரித்து வருகிறார். இந்நிலையில், வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு அறையில் கோலி அமர்ந்திருக்கிறார். அவருடன் இருக்கும் இருவர், கோலியின் தாடியை வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கின்றனர். இறுதியில் கோலி, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், தாடியை கோலி காப்பீடு செய்திருக்கிறார் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையாகவே அந்த வீடியோவில் நடந்த நிகழ்வு என்ன என்றும், கோலி எதற்காக கையெழுத்திட்டார் என்பதும் உறுதியாக தெரியாத நிலையில், ரசிகர்கள் அனுமானத்தில் இவ்வாறு கருத்து பதிவிடுகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த கருத்தை வழிமொழிந்துள்ள கிரிக்கெட் வீரர் ராகுல், கோலி தனது தாடியை காப்பீடு செய்ய வாய்ப்பிருப்பதாக தான் ஏற்கனவே நினைத்தது, தற்போது வரும் தகவல்கள் உறுதிப்படுத்திவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, தனது கால்களை காப்பீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. கால்பந்து வீரருக்கு கால் தான் மூலதனம் என்பதால் அவர் தனது கால்களை காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில், கோலி தனது தாடியை காப்பீடு செய்திருப்பதாக பரவும் தகவலின் உண்மை தன்மை தெரியவில்லை.
