மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதுக்கோட்டை அணி சாம்பியன் வென்று அசத்தல்...
மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதுக்கோட்டை கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மாநில அளவிலான கால்பந்து போட்டி உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், உடுமலை வாரியர்ஸ் கால்பந்துக் குழு சார்பில், நேதாஜி மைதானத்தில் போட்டி நடைபெற்று வந்தது.
இந்தப் போட்டியில் சென்னை, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, கொடைக்கானல், புதுக்கோட்டை, சிவகாசி, மதுரை, திண்டுக்கல், சிதம்பரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
நாக் ஔட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு காயல்பட்டினம் கால்பந்து அணியும், புதுக்கோட்டை கால்பந்துக் குழுவும் தேர்வாகின.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் போராடியதால் இறுதிவரை இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர், வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி கிக் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை அணி வெற்றிப் பெற்று அசத்தியது.
சாம்பியன் பட்டம் வென்ற புதுக்கோட்டை அணிக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன.
இரண்டாம் பரிசாக காயல்பட்டினம் அணிக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டன.
உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.எம்.நாகராஜன், சக்கரபாணி, குமரன் உள்ளிட்டோர் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.