விளையாட்டு வீரர்களை எப்படி உருவாக்கணும்னு இந்தியாவை பார்த்து கத்துக்கங்க..! பாகிஸ்தானை விளாசும் குடிமக்கள்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் முதல் தங்கத்தை வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவை இந்தியா உருவாக்கியுள்ள விதத்தை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காததை பாகிஸ்தானியர்கள் விமர்சித்துள்ளனர். இந்த விஷயத்தில் இந்தியாவின் செயல்பாட்டையும் பாகிஸ்தானியர்கள் புகழ்ந்துவருகின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 7 பதக்கங்களை வென்றுள்ளது. 2 வெள்ளி, 4 வெண்கலத்தை இந்தியா வென்றிருந்த நிலையில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதுதான் சுதந்திர இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் கிடைத்த முதல் தங்கம். எனவே இந்தியாவிற்கு வரலாற்று சாதனையை பெற்று கொடுத்த நீரஜ் சோப்ரா பாராட்டு மழையில் நனைந்துவருகிறார்.
ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்றிருக்கிறது. ஒலிம்பிக்கில் இந்த முறை இந்தியா சாதித்திருப்பதற்கு, விளையாட்டுக்கு இந்திய அரசு கொடுத்த முக்கியத்துவமும், விளையாட்டு வீரர்கள் மேம்படுவதற்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்ததும் தான். இவையனைத்தையும் விட, பிரதமர் மோடியின் ஊக்குவிப்பும், அவர் அளித்த உத்வேகம் மற்றும் ஆதரவும் தான்.
விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு தேவையான அனைத்துவிதமான வசதிகளையும் ஏற்படுத்தி தருவதுடன், அவர்களை போட்டிக்கு முன்னும் பின்னும் பிரதமர் மோடி நேரடியாக தொடர்புகொண்டு உத்வேகப்படுத்துவது, இந்தியாவிற்கு பதக்கத்தை வென்று கொடுக்க வேண்டும் என்ற வேட்கையை விளையாட்டு வீரர்களிடம் ஏற்படுத்துகிறது.
அந்தவகையில், தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தயாராவதற்கு இந்திய அரசும் விளையாட்டுத்துறையும் தனக்கு ஏற்படுத்தி கொடுத்த வசதிகளுக்காக நன்றி தெரிவித்து டுவீட் செய்தார். தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஸ்வீடனில் பயிற்சி மேற்கொண்டவர்.
இதுகுறித்த நீரஜ் சோப்ராவின் டுவிட்டர் பதிவில், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான எனது தயாரிப்பிற்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்ததால் தான் என்னால் ஜெயிக்க முடிந்தது. நான் ஐரோப்பாவில் பயிற்சி மேற்கொண்டுவருகிறேன். அதற்கு தேவையான தூதரக ரீதியான அரசின் நடவடிக்கைகளுக்கும், பெருந்தொற்று நேரத்தில் எனக்கு விசா பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொண்டதற்கும் இந்திய அரசுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அரசு இந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதை அறிந்த பாகிஸ்தானியர்கள், இந்தியாவை புகழ்வதுடன், தங்கள் நாட்டு அரசு எதையுமே செய்யாததால் அதிருப்தியடைந்து கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இவ்வளவுக்கும், விளையாட்டு வீரரான(பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்) இம்ரான் கான் ஆளும் பாகிஸ்தானில் விளையாட்டுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படாதது, அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதை அவர்கள் டுவிட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நீரஜ் சோப்ராவின் டுவீட்டை டேக் செய்து பாகிஸ்தானியர்கள் பல டுவீட்டுகள் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு பாகிஸ்தானியர், தங்கம் வெல்ல வேண்டும் என நினைக்கும் பாகிஸ்தான், அதற்கான தயாரிப்புக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில்லை. அந்த விஷயத்தில் தான் நீரஜ் டாப்பில் இருக்கிறார். நமது நாட்டின்(பாகிஸ்தான்) சார்பில் யார் ஃபைனலுக்கு தகுதிபெற்றார் என்பது கூட நமக்கு தெரியாது என்று அந்த பாகிஸ்தானியர் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அதேபோல் மற்றொரு பாகிஸ்தானியர், இப்படித்தான் ஒலிம்பிக் தங்க பதக்க வெற்றியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். நீரஜ் சோப்ரா ஐரோப்பாவில் பயிற்சி பெறுகிறார். அவரது பயிற்சியாளர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். இங்கு(பாகிஸ்தானில்) விளையாட்டு வீரர்களுக்கு தேவையான நவீன பயிற்சி வசதிகளை ஏற்படுத்தி தருவதில்லை. இதுதான் இந்திய வீரருக்கும், பாகிஸ்தான் வீரருக்குமான வித்தியாசம் என்று அவர் தனது வலியை பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை டேக் செய்து ஒரு பாகிஸ்தானியர் பதிவிட்ட டுவீட் நீக்கப்பட்டிருக்கிறது.