Asianet News TamilAsianet News Tamil

இந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தான் இளைஞர்!! நெகிழவைக்கும் சம்பவத்தின் வைரல் வீடியோ

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. லீக் போட்டிகள் முடிந்து சூப்பர் 4 சுற்று நடந்துவருகிறது. 
 

pakistan youth sung indian national anthem during cricket match
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 22, 2018, 1:51 PM IST

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. லீக் போட்டிகள் முடிந்து சூப்பர் 4 சுற்று நடந்துவருகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றில் ஆடிவருகின்றன. இந்த தொடரின் லீக் போட்டியில், ஓராண்டுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியதால் அதன்மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த இந்திய அணி, கடந்த புதன்கிழமை துபாயில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பழிதீர்த்தது. 

இந்தியா பாகிஸ்தான் இடையே சுமூக உறவு இல்லாததால், இரு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதில்லை. ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் கலந்துகொள்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி அவ்வப்போது இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் என்றாலே எதிரி நாடுகளாகவே பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் என்றால் எதிரி அல்ல; நாம் சகோதரர்களே என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது பாகிஸ்தான் இளைஞரின் செயல்.

pakistan youth sung indian national anthem during cricket match

கடந்த 19ம் தேதி துபாயில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நடந்தது. கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது, இருநாடுகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. அப்போது, இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், இந்திய தேசிய கீதத்தை பாடினார். தோளில் பாகிஸ்தான் தேசிய கொடியை போட்டுக்கொண்டு இந்திய தேசிய கீதத்தை பாடினார் அந்த இளைஞர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது. 

இந்த வீடியோவை இரு நாட்டினரும் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios