தந்தை இறந்த துக்கத்திலிருந்து மீண்டு வந்து மிரட்டிய நிகிடி!
சென்னை அணியில் இணைந்து டெல்லி அணிக்கு எதிராக மிரட்டலாக பந்து வீசிய லுங்கிசனி நிகிடி, தற்போது சென்னை அணியின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய வீரராக மாறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரரான லுங்கிசனி நிகிடி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியதால், சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா வந்திருந்தார் நிகிடி. ஆனால், கடந்த மாதம் இவரது தந்தை திடீரென மரணமடைந்ததால் சொந்த ஊருக்கு திரும்பிய நிகிடி, இறுதி சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்தடைந்தார்.
இதற்கிடையில், சென்னை அணியில் தாகூர், தீபக் சாஹர், பிராவோ, வாட்சன் ஆகியோர் தான் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இவர்களின் பந்துவீச்சு எதிரணியை அச்சுறுத்தும் வகையில் இல்லை.
தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுக்கின்றனர். வாட்சனின் பந்துவீச்சும் எடுபடவில்லை. பிராவோவின் அனுபவம் மட்டுமே சென்னை அணிக்கு உதவி வருகிறது. இதனால் சென்னை அணி பந்துவீச்சில் தடுமாறி வந்தது.
இந்நிலையில் சென்னை அணிக்குள் வந்த நிகிடி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். தனது முதல் இரண்டு ஓவர்களில் 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
பின்னர், ரிஷாப் பண்ட் இவரது பந்துவீச்சை விளாசிய போதிலும், 4 ஓவர்கள் வீசிய நிகிடி 26 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்தாலும், அது சென்னை அணியை தோல்விக்கு கொண்டு செல்லும் வகையில் விளையாடிய ரிஷாப் பண்ட்டின் விக்கெட்டாகும். மேலும், 12 dot பந்துகளை நிகிடி வீசியது குறிப்பிடத்தக்கது.
நிகிடியின் சிறப்பு என்னவென்றால் கடைசி கட்டத்தில் யார்க்கர், வேகத்தை மாற்றி விதவிதமாக வீசுவது, வெவ்வேறு Length-யில் வீசுவதாகும். இதனால் தற்போது சென்னை அணியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக நிகிடி மாறியுள்ளார்.