காமன்வெல்த்தில் வெற்றியைக் குவித்த இந்திய அணிக்கு மோடி, ராகுல் பாராட்டு...
காமன்வெல்த் போட்டிகளில் வெற்றியைக் குவித்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மோடி டிவிட்டரில் பதிவிட்டது:
"காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி பெற்றுள்ள வெற்றி ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படச் செய்துள்ளது. நமது வீரர்கள் அனைவரும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தி, சிறப்பாக விளையாடினர். பதக்கங்கள் வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
அவர்களது வாழ்க்கை வரலாறு அர்ப்பணிப்பின் வலிமை, எதையும் எதிர்கொள்ளும் திடத்தையும், தடைகளை தகர்த்து முன்னேறும் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்த வெற்றி இளைஞர்களுக்கு விளையாட்டில் பங்கேற்க புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்திய விளையாட்டுத் துறையை வலிமைப்படுத்த அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்" என்று தெரிவித்து இருந்தார்.
அதேபோன்று ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பாராட்டு டிவிட்:
"'காமன்வெல்த் போட்டியில் 3-வது இடம் பெற்ற நமது அணியை பாராட்டுகிறேன். 26 தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். நீங்கள் அனைவரையும் பெருமைப்படச் செய்துள்ளீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.