ஃபீல்டிங்னா இப்படி இருக்கணும்..! தோனி யாரை உதாரணம் காட்டினார் தெரியுமா..?
ஃபீல்டிங்கில் வேகமாக இருப்பதை விட கவனமாக இருப்பதே முக்கியம் என சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதன்பிறகு ஷுப்மன் கில்லின் பொறுப்பான ஆட்டம் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால், 17.4 ஓவருக்கே இலக்கை எட்டி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணியின் மோசமான பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கே சென்னை அணியின் தோல்விக்கு காரணம்.
போட்டிக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, இன்னும் சற்று அதிகமாக ரன்கள் எடுத்திருந்தால் வெற்றிக்கு உதவியிருக்கும். எனினும் எங்கள் அணியின் பந்துவீச்சும் ஃபீல்டிங்கும் சரியில்லை. ஃபீல்டிங் செய்யும்போது வீரர்கள் களத்தில் கவனமாக இல்லாதது அதிருப்தியடைய செய்தது. ஃபீல்டிங்கில் வேகமாக செயல்படுவதை விட கவனமாக செயல்படுவதே முக்கியம். அதற்கு சிறந்த உதாரணம் மைக் ஹசி. ஹசி சென்னை அணிக்காக விளையாடிய சமயத்தில், ஃபீல்டிங்கின்போது மிகவும் கவனமாக இருப்பார். அவர் வேகமானவர் அல்ல. ஆனால் எந்நேரமும் பந்தை எதிர்நோக்கிய வண்ணம் இருப்பார். அவ்வாறு ஃபீல்டிங்கில் கவனமாக இருப்பதுதான் முக்கியம் என தெரிவித்தார்.
இந்த போட்டியில், கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைனுக்கு அடுத்தடுத்து இரண்டு கேட்ச்களை ஜடேஜா தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.