like Dhoni Gail I am not powerful - Captain Rohit Sharma
எம்.எஸ்.தோனி, கிறிஸ் கெயில் ஆகிய வீரர்கள் போன்று நான் அதிக சக்திவாய்ந்தவன் கிடையாது. ஆனால், பந்து வரும் நேரத்தை கணித்து என்னால் விளையாட முடியும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் சர்மா மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
ஆட்டம் முடிந்த பிறகு, அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் ரோஹித் சர்மா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியது:
"இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஷிகன் தவன் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். ஆட்டத்தில் சிறப்பான ஜோடி அமைவதும் முக்கியம்.
ஒரு பந்துவீச்சாளர் ஒருவருக்கு மட்டுமே ஆறு பந்துகளையும் வீச விடாமல் செய்தோம். அதாவது, ஒரு ஓவரில் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடி இடம்மாறிக் கொண்டிருந்தோம். தவன், இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும், நான் வலது கை பேட்ஸ்மேன் என்பதாலும் இவ்வாறு இடம்மாறி பந்துவீச்சாளர்களுக்கு சவாலை ஏற்படுத்தினோம்.
அணி வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்தும் பயிற்சியாளர் சங்கர் பாசுஸுக்கு நன்றி. எம்.எஸ்.தோனி, கிறிஸ் கெயில் ஆகிய வீரர்கள் போன்று நான் அதிக சக்திவாய்ந்தவன் கிடையாது. ஆனால், பந்து வரும் நேரத்தை கணித்து என்னால் விளையாட முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
